பூதப்பாண்டி அருகே தோட்டத்து மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
பூதப்பாண்டி அருகே ஞாலம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் தர்மர் (36). இவரது மனைவி நிவேதிதா. தர்மர் செங்கல் சூளைத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது நாய் குரைக்கும் சப்தம் கேட்டு தர்மரும், அவரது மனைவியும் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் இருந்து சப்தம் கேட்டதால் தர்மர் தோட்டம் அருகே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, வாழைத்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்டதில், உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து பூதப்பாண்டி போலீஸார் வாழைத் தோட்ட உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.