தம்பதியை ஆட்டோவில் கடத்தி தாக்குதல்: 16 பேர் மீது வழக்கு

களியக்காவிளை அருகே கடனாக வாங்கிய பணத்துக்கு வட்டி செலுத்த தவறிய தம்பதியை  ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கியதாக 16 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

களியக்காவிளை அருகே கடனாக வாங்கிய பணத்துக்கு வட்டி செலுத்த தவறிய தம்பதியை  ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கியதாக 16 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வதாஸ். காவல்துறை ஆய்வாளரான இவர் சில ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்தபோது இறந்தார். இவரது மகன் பெலிக்ஸ் (46). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சஜினி (42). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 
பெலிக்ஸ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தேங்காய்ப்பட்டணம் கொக்கச்சிமூலை பகுதியைச் சேர்ந்த பாலையன் மகன் குரு (40) என்பவரிடமிருந்து ரூ. 1.5 லட்சம் கடனாக வாங்கினாராம். இத்தொகைக்கு மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்தாராம். தொடர்ந்து வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த இரு மாதங்களாக வட்டி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த இத்தம்பதியை 2 ஆட்டோ, 8 பைக்குகளில் வந்த 15 பேர் கும்பல் கடத்திச் சென்றனராம். மேலும், ஆட்டோவில் தம்பதியை ஏற்றிச் சென்ற இக்கும்பல் கடுமையாக தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்தனராம். இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலையில் இருவரையும் அருமனை பகுதியில் சாலையோரம் வீசி சென்றதாகத் தெரிகிறது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தம்பதியை மீட்டு அருமனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சஜினி அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸார் குரு மற்றும் அடையாளம் தெரியும் 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com