நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில்பெறப்பட்ட 62 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், 4 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் பார்வையற்றோர் சாலையில் நடக்கும் போது எதிர்வரும் பொருள்களை மின் அதிர்வலைகள் மூலம் கண்டறியும் மடக்கு குச்சிகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் து. கதிர்வேலு, அரசு துறை அலுவலர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.