சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்று படகு பழுதாகி தத்தளித்த 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
சின்னமுட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டி என்பவர் தனக்குச் சொந்தமான விசைப்படகில் அபிஷேக், மார்சலின், விஜயகுமார், மோகன்ராஜ், ஆஸ்டின், மரியான், ரவிங்ஸ்டன், ஜூடு, ஜோயல்டன், தொம்மை, ஜெர்மான்ஸ், ஆனிஸ்டன் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்றனர். அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு அன்றையதினம் இரவு கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், புதன்கிழமை வரை 13 பேரும் கரை திரும்பவில்லை.
இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்புப் படை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கன்னியாகுமரி மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ், பிராங்களின், பாரிஸ்டன், சேவியர் ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளில் மீனவர்களைத் தேடிச் சென்றனர். இந்நிலையில், துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் படகு பழுதாகி தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை, அவர்களது படகுடன் சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.