நித்திரவிளை அருகே பயணியர் ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 280 லிட்டர் மண்ணெண்ணெயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நித்திரவிளை அருகேயுள்ள விரிவிளை பகுதியில் சனிக்கிழமை இருசக்கர ரோந்து பிரிவு காவலர் ராஜகுமார் மற்றும் போலீஸ் - நண்பர்கள் குழுவைச் சேர்ந்த காவலர்கள் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதி வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட பயணியர் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். அதன் ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். போலீஸார், ஆட்டோவை சோதனையிட்டதில், படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 280 லிட்டர் இருப்பது கண்டறியப்பட்டது. ஆட்டோவுடன் மண்ணெண்ணெயை போலீஸார் பறிமுதல் செய்து, நித்திரவிளை காவல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து ஆட்டோ மற்றும் மண்ணெண்ணெய் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.