தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை வேண்டி, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தமிழறிஞர்கள் 26-ஆவது பரப்புரை ஊர்திப் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
உலகப் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் தலைமையில், கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்னிருந்து இப்பயணம் புறப்பட்டது. அனைத்து மாவட்டங்கள், சிற்றூர், பேரூர்கள் வழியாக பொதுமக்களைச் சந்தித்து தாய்மொழியை முதன்மைப்படுத்தும் கொள்கைகளை வலியுறுத்தி, 25-ஆம் தேதி சென்னையில் பயணம் நிறைவடைகிறது.
இதன் தொடக்க விழா நிகழ்வுக்கு குமரி மாவட்ட பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் தியாகி கோ. முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சி.பா. அய்யப்பன் வரவேற்றார். கன்னியாகுமரி ஆன்மிகத் தோட்டம் பொறுப்பாளர் பணிவன்பன், பொ. வின்சென்ட் அடிகளார், ஆய்வுக் களஞ்சியம் ஆசிரியர் முனைவர் சிவ. பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், கவிமணி நற்பணி மன்ற செயலர் புலவர் மு. சிவதாணு, குறளகம் நிறுவனர் கவிஞர் தமிழ்க்குழவி, கம்பன் கழகச் செயலர் காவடியூர் சிவ. நாராயணப் பெருமாள், குமரி தமிழ்வானம் நிறுவனர் செ. சுரேஷ், கவிமணிதாசன் நற்பணி மன்றத் தலைவர் கவிஞர் ப. மாதேவன்பிள்ளை, அன்பர் கழகம் அமைப்பாளர் புலவர் சூசை அமலதாஸ், தெற்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் வழக்குரைஞர் திருத்தமிழ்த் தேவனார், வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகி நா. ஆழ்வார்பிள்ளை, கவிஞர் காப்பியத்தமிழன், ஒளிவெள்ளம் ஆசிரியர் பா. பிதலிஸ், உண்மை உயர்வு ஆசிரியர் பார்வதிபுரம் சாலமோன் மனுவேல், திருக்குறள் ஆய்வு மையச் செயலர் த.இ. தாகூர், எழுத்தாளர் த. ஜெகன், பிரம்ம ஞான சங்கப் பொறுப்பாளர் எஸ். சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வ.உ.சி. தேசியப் பேரவை செயலர் செயலர் த. தாமஸ் நன்றி கூறினார்.