கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் "சாம்பல் புதன்' வழிபாட்டுடன் புதன்கிழமை (பிப். 14) தொடங்குகிறது.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் கடைப்பிடிக்கப்படும் இந்தத் தவக்காலத்தின் தொடங்க நாள் "சாம்பல் புதன்' அல்லது "திருநீற்றுப் புதன்' என அழைக்கப்படுகிறது.
தவக்கால நாள்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, ஜெபம், தவம், தர்மம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகளும் எளிமையாக நடத்தப்படுகின்றன.
நிகழாண்டுக்கான "சாம்பல் புதன்' வழிபாடு தேவாலயங்களில் புதன்கிழமை நடைபெறுகிறது. ஆலயத்தில் அருள்பணியாளர்கள் தவக்கால தொடக்க திருப்பலி நிறைவேற்றி, பக்தர்கள் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைகின்றனர்.
தொடர்ந்து, 40 நாள்களும் ஆலயங்களிலும், வீடுகளிலும் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
குமரி மாவட்டத்தில் கோட்டாறு மறைமாவட்டத்திற்குள்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள், சிஎஸ்ஐ ஆலயங்கள், சீரோ மலபார் திருச்சபை ஆலயங்கள், சீரோ மலங்கரை திருச்சபை ஆலயங்கள், மார் தோமா திருச்சபை ஆலயங்கள், ரட்சணிய சேனை ஆலயங்கள் உள்ளிட்டவைகளில் சாம்பல் புதன் வழிபாடுகள் நடைபெறுகின்றன.