மார்த்தாண்டம் அருகே சிறுமியிடம் நகை பறிப்பு: இளைஞர் கைது
மார்த்தாண்டம் அருகே தேவாலய திருவிழாவுக்குச் சென்ற சிறுமியிடம் முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த ஏசுதாசன் தனது மனைவி மேரிகலா, மகள் எலிசா டோனா (7) ஆகியோருடன் மார்த்தாண்டம் அருகேயுள்ள வெட்டுவெந்நி புனித அந்தோணியார் குருசடி திருவிழாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார்.
பின்னர், இவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளைஞர் ஒருவர், எலிசா டோனா கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றாராம். அருகிலிருந்தவர்கள் இதைப் பார்த்து, இளைஞரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஹாஜா (34); குமரி மாவட்ட காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து மேல்விசாரணை செய்துவருகின்றனர்.