கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை (பிப். 21) நடைபெற உள்ளது. மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரியில் பிப். 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் இம்முகாம் நடைபெறும்.
இம்முகாமில் முன்னணி நிறுவனங்கள், திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. 5 ஆம் வகுப்பு தேர்ச்சிமுதல் பட்ட மேற்படிப்பு வரையிலான கல்வித் தகுதியுடையோர் பங்கேற்கலாம்.
மேலும், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் குறுகிய கால திறன் பயிற்சிகளுக்கும், தொழிற்பழகுநர் பயிற்சிகளுக்கும் விருப்பம் தெரிவித்து இம்முகாமிலேயே பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மற்றும் புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விரும்புவோருக்கு இலவசமாக விண்ணப்ப படிவங்கள் வழங்குதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்காக பதிவுசெய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும். உயர்கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித்தொகை, போட்டித்தேர்வு மூலம் அரசுப் பணி பெறுதல், சுய வேலைவாய்ப்பிற்கான கடனுதவித் திட்டங்கள் போன்ற பல்வேறு வகையான அரசு உதவித்தொகைகள் குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தகுதியுடைய அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக வேலைவாய்ப்பு- பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.