களியக்காவிளை அருகே சாஸ்தா கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
முளவறக்கோணம், இளம் பாலகண்டன் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் தர்மசாஸ்தா, கணபதி, முருகன், துர்க்கையம்மனுக்கு என தனித்தனியாக உள்ள சன்னதிகளில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை மாலையில் பூஜைகள் முடித்த பூசாரி வழக்கம்போல கோயிலை பூட்டிச் சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலையில் பக்தர்கள் கோயிலுக்கு வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கோயில் கமிட்டித் தலைவர் புவனேந்திரன் களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.