கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் செல்லும் முக்கிய சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதியடைந்தனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு புகழ்மிக்க பகவதியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக நூற்றுக்கும் அதிகமான தங்கும் விடுதிகள், உணவகங்கள் அமைந்துள்ளன. இவைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பெரும்பாலும் கடலில் கலக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கழிவுநீர் செல்லும் ஓடையில் சனிக்கிழமை திடீரென அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியே செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடை வியாபாரிகள் பெரிதும் அவதியடைந்தனர். இதுபோன்று அடிக்கடி நடைபெறுவதால் நிரந்தரமாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டுமென அப்பகுதி கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.