வடிவீசுவரம் அழகம்மன், சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசித்திருவிழா மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்புப் பெற்ற கோயில்களுள் ஒன்று வடிவீசுவரம் அருள்மிகு அழகம்மன் சமேதஸ்ரீ சுந்தரேசுவரர் கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருந்திருவிழா 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் 3 ஆம் திருநாளன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு, இரவு 9 மணிக்கு வடிவீசுவரம் கன்னிவிநாயகர் கோயிலிலிருந்து சிறப்பு வாகன அலங்காரம், மேளதாளங்களுடன் மக்கள்மார் அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு பள்ளத்தெருவில் அருள்மிகு கன்னிவிநாயகர், சுப்பிரமணியசுவாமி ஆகியோர் தாய் தந்தையான சுந்தரேசுவரர், அழகம்மனை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வடிவீசுவரம், மீனாட்சிபுரம், கோட்டாறு, மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் சுசீந்திரம் திருக்கயிலை பேரிசைக்குழுவினரின் கயிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. பின்னர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தேரோட்டம்: திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் புதன்கிழமை(பிப்.28) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அன்று காலை 5 மணிக்கு சுப்பிரமணியசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் தடம் பார்க்க எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தாவர்ண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.