அருமனை அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்து.
தலைமை ஆசிரியர் மோகனன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பேசியது: கல்வியில் நிலவும் புதிய சூழல்களை கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவச் சமுதாயம் சர்வதேச தரத்தில் தங்களை தயார் படுத்திக்கொள்வது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. பள்ளி இறுதி வகுப்புகளுக்குப் பின்னர் போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும். இதற்காக புதிய பாடத்திட்டங்கள் கைகொடுக்கும். புதிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் லட்சுமணசாமி, நாகர்கோவில் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரைட் செல்வகுமார், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரகாஷ், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் என். கமலன் ஆகியோர் பேசினர். உதவித் தலைமை ஆசிரியர் இந்திராகுமாரி நன்றி கூறினார்.