எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தாமல் அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் மற்றும் கூட்டு சிகிச்சை மையம் சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது: சமத்துவ பொங்கல் விழா சமூகத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எதிரே இருக்கும் வேறுபாடுகளை அகற்றுவதற்காகவும், இந்த நோயினை சுற்றியுள்ள சில மூடநம்பிக்கைகளை உடைப்பதற்கும் ஒரு வழியாக அமைகிறது. மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தக் கூடாது . அவர்களை அன்போடு இணைத்து சமுதாயத்தில் அவர்கள் முன்னேற வழி அமைக்க வேண்டும் என்றார் அவர்.
பின்னர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட மக்கள், நிர்வாக ஊழியர்கள் அனைவரும் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினார். நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பானை உடைத்தல், லெமன் - ஸ்பூன், இசை நாற்காலி போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.
விழாவில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், ஏ.ஆர்.டி. மைய மருத்துவர்கள் பெடலிஸ் ஷமிலா, சுரேஷ், ஸ்டெல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ.ஆர்.டி. மைய முதன்மை அலுவலர் பிரின்ஸ் ஸ்ரீகுமார் பையஸ் நன்றி கூறினார்.