குலசேகரம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
குலசேகரம் அருகே அண்டூர் பகுதியில் பழமையான ஆவணம்பாறை சாஸ்தா கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் பக்தர்களின் பராமரிப்பில் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் வளாகத்தை தனியார்கள் பாதையாக பயன்படுத்தி வந்ததுடன், அதற்கான உரிமையும் கோரினர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. இந்நிலையில் நீதிமன்றம் அண்மையி கோயில் நிலத்தை தனியார்கள் பாதையாக பயன்படுத்துவது சட்டவிரோதம் எனவும், அப்பகுதி பாதையாக பயன்படுத்தும் நிலம் கோயிலுக்கே சொந்தம் எனவும் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் அறநிலையத் துறை உதவி ஆணையர் ரத்தினவேல் தலைமையில் கண்காணிப்பாளர்கள் ஜீவானந்தம், சிவராமசந்திரன், ஸ்ரீகாரியம் செந்தில், சண்முகம் பிள்ளை, நில அளவை அதிகாரி ஐயப்பன், பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பக்தர்கள் உதவியுடன் கோயில் வளாகத்தைச் சுற்றி மதிற்சுவர் எழுப்பியதுடன், அறிவிப்புப் பலகையும் வைத்தனர்.
2013 இல் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றுதல் குழு மூலமாக குமரி மாவட்டத்தில் இதுவரை 30 கோயில்களுக்குச் சொந்தமான 31 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை மீட்டதாகவும், இதன் மதிப்பு ரூ. 35 கோடி எனவும், மேலும் 40 இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.