கோவளத்தில் உண்ணாவிரதம்
கன்னியாகுமரி பன்னாட்டு சரக்குப் பெட்டக முனையத்துக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு இயக்கம் சார்பில் கோவளம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் முதல் கீழமணக்குடி வரையிலான கடற்கரைப் பகுதியில் சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்குப் பெட்டக முனையம் அமைக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான முதல் கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தப்பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைந்தால் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் கோவளம் கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பிரபா பெர்னாண்டோ, ஆர்.எஸ்.பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. இரா.பெர்னார்டு, குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜெலஸ்டின், குளச்சல் நகராட்சி முன்னாள் தலைவர் ஜேசையா, சமூகவிடியல் இயக்கத் தலைவர் ஸ்ரீதரன், மதசார்பற்ற ஜனதாதள அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவர் யு.தியாகராஜன், அகஸ்தீசுவரம் ஒன்றிய நாம்தமிழர் கட்சி செயலர் தமிழ்செல்வன் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர்.