நாகர்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் குமரி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர், மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.
நாகராஜா திருக்கோயிலில் நடைபெற்ற இப் போட்டிகளுக்கு அறநிலையத்துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி மற்றும் சுசீந்திரம் இணை ஆணையரும், செயல்அலுவலருமான ம. அன்புமணி ஆகியோர் தலைமை வகித்தனர். நாகர்கோவில் உதவி ஆணையர் து.ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இப்போட்டிகள் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவு, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவு என தனித்தனியாக 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் நெட்டாங்கோடு அரசு பள்ளி, ஆரல்வாய்மொழி இந்து வித்யாலயா பள்ளி, நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் பள்ளி, தோவாளை கேந்திர வித்யாலயா பள்ளி, தோவாளை எல்.ஹெச்.எல். சிபிஎஸ்இ பள்ளி, உள்ளிட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி வழங்கினார். இதில் உதவி ஆணையர் அலுவலக தலைமை எழுத்தர் மு.முருகன், செயல் அலுவலர்கள், சரக ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கன்னி விநாயகர் கோயில் செயல் அலுவலர் பொன்னி நன்றி கூறினார்.