அகஸ்தீசுவரத்தில் காங்கிரஸ் கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை தென்தாமரைகுளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகஸ்தீசுவரம் தெற்குச் சாலையில் உள்ள காங்கிரஸ் ஆட்டோ ஓட்டுநர் சங்க கொடிக் கம்பம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக செந்தில்குமார் என்பவர் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அகஸ்தீசுவரத்தைச் சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி ஒன்றியச் செயலர் ரமேஷ் மற்றும் சுயம்புலிங்கம் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்னன் தலைமை வகித்தார்.
இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாலையா, அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவர் எஸ்.பி.ராஜஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.