ஒக்கி புயலில் உயிரிழந்த மேலும் ஒரு மீனவரின் உடல் அடையாளம் கண்டுபிடிப்பு
ஒக்கி புயலில் உயிரிழந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவரின் உடல் மரபணு சோதனை மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த நவ. 30 ஆம் தேதி வீசிய ஒக்கி புயலால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். இதில் நூற்றுக்கணக்கானோர் கேரளம், குஜராத், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கரையேறி ஊருக்குதிரும்பி வந்தனர். இது தவிர பலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலரது சடலங்கள் கேரள கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. அவ்வாறு கரை ஒதுங்கிய சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவு சிதைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் மரபணு(டி.என்.ஏ) சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்களின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே குளச்சலை அடுத்த கடியப்பட்டினம் தோமையார் தெருவைச் சேர்ந்த டெல்பின்ராஜ்(49) என்பவரது சடலம் கேரள மாநிலம் திரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மரபணு சோதனை மூலம் வெள்ளிக்கிழமை அவரது சடலம் அடையாளம் காணப்பட்டு, உறுதி செய்த மருத்துவர்கள் பின்னர் அதனை டெல்பின்ராஜ் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் சனிக்கிழமை அவரது சொந்த ஊருக்கு சடலம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மேரி இந்திரா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.