தாழக்குடி வீரகேரளப்பன் குளத்தில் பக்க சுவர் இடிந்து குளம் உடையும் அபாய நிலையில் உள்ளது.
தாழக்குடி - சீதப்பால் இடையே அமைந்துள்ள வீரகேரளப்பன்குளத்துக்கு புத்தனார் கால்வாயில் இருந்து தண்ணீர் வருகிறது. இதனால் எப்போதும் இக்குளம் நிரம்பியே காணப்படும்,. மேலும் குளத்தில் பெருகும் தண்ணீரை நம்பி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இக்குளத்திற்கும் -வயலுக்கும் இடைய தாழக்குடியில் இருந்து சீதப்பாலுக்கும், பூதப்பாண்டிக்கும் செல்கின்ற சாலை உள்ளது. இச்சாலை வழியாக அதிகமான இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.
தற்போது, பார்வதிபுரத்தில் மேம்பாலப் பணி நடைபெறுவதால் கனரக வாகனங்கள் இரவு நேரங்களில் இறச்சகுளம், ஆண்டித்தோப்பு வழியாக ஆரல்வாய்மொழி, தாழக்குடி வழியாக வந்து செல்கின்றன. கடந்த பல வாரங்களாக மழை பெய்து வருவதால், குளத்தில் தண்ணீர் அளவு உயர்ந்து காணப்படுகிறது. இதனால் குளக்கரையானது, நாளுக்கு நாள் வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில், குளக்கரையின் உள்பக்க சுவரானது இடிந்து குளத்தில் விழுந்தது.
குளத்தில் அதிக அளவில் தண்ணீர் உள்ளதால் இடிந்த பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் குளம் உடையும் அபாய நிலையில் உள்ளது. இக் குளம் உடைந்தால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 300 ஏக்கர் நெற்பயிரானது அழியும் அபாயம் உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் நீர் செல்கின்ற அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது பணித்துறை அதிகரிகள் உடனே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறச்சகுளம் வழியாக வருகின்ற சில கனரக வாகனங்கள் ஆரல்வாய்மொழிக்கு செல்லவழி தெரியாமல் தாழக்குடிக்கு வந்து செல்கின்றன. இதனை தடுப்பதற்கு சீதப்பால் அருகே அறிவிப்பு பலகை வைத்து கனரக வாகனம் இப்பகுதி வழியாக வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.