கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் உறுதியாக அமைக்கப்படும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து திங்கள்கிழமை நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி:
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் உறுதியாக அமைக்கப்படும். மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பதற்கும், மீன் ஏற்றுமதிக்கும் திட்டமிட்டு வருகிறோம். குமரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
நீரோடி, வள்ளவிளை, மண்டைக்காடு புதூர் உள்ளிட்ட பல இடங்களில் கடலரிப்பு பிரச்னை உள்ளது. இந்த பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முட்டை ஊழல் பிரச்னையில், நான் கூறியதை புரிந்துகொண்டு அமைச்சர் ஜெயகுமார் பேசவேண்டும். அதில், ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் போது முட்டை ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினேன்.
தமிழ்நாடு ஊழல்மயமாகியுள்ளது, தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைத்தான் மக்கள் மொட்டையடிக்கப்படுகிறார்கள் என கூறினேன். தமிழகம் ஊழலில் இருந்து விடுபடவேண்டும் என்றார் அவர்.