வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தும், அந்தத் தீர்ப்பை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டியலின, பழங்குடியின அமைப்புகளின் கூட்டம் நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க அலுவலக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் க.கணேசன் விளக்கிப் பேசினார். சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் திருமாவேந்தன் ஆகியோர் உரையாற்றினர்.
இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் மாத்தூர் ஜெயன், இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவர் ரவீந்திரன், ஆதிவாசிகள் விடுதலை இயக்க நிர்வாகி முருகன், ஆதிவாசிகள் மகாஜன சங்க நிர்வாகி எஸ்.ராஜன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் வி.ரகு, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஜெ.ஜவகர், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி சதா, அம்பேத்கர் பாசறை நிர்வாகி சுகுமாரன், தலித் கூட்டமைப்பு தலைவர் பால் ராஜ், பழங்குடி பாரதம் அமைப்பு நிர்வாகி சுரேஷ் சாமியார் காணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் இ.விஸ்வநாதன், ராஜதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.