மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி, குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலை அருகேயுள்ள செங்கல்சூளை ஒன்றில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சுதால்சர்தா (50) என்பவர், தனது மனைவி சைமாலி சர்தா (44) மற்றும் மகள், மருமகனுடன் தங்கியிருந்து கடந்த ஒரு வார காலமாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற சுதால்சர்தா வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடிய நிலையில், அப்பகுதியிலுள்ள தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் பூபதி மற்றும் போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து, அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.