சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அருமனையில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கூறியுள்ளது. மதம் சார்ந்த நெறிமுறைகளை சம்யம் சார்ந்த மதகுருமார்கள்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர நீதிமன்றமும், அரசும் இதில் தலையிடுவது சரியல்ல. இது குறித்து சீராய்வு மனு அளிக்க வேண்டிய கேரள மாநில அரசு பெண்களை அனுமதிப்பதில் தீவிர"ம் காட்டி வருகிறது.
இந்நிலையில், சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்று பெண்களே மனமுவந்து கூறிவருகிறார்கள். கேரள மாநில மக்களும் சூளுரைத்துள்ளனர். மேலும் தமிழகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி, கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை கண்டிக்கும் வகையிலும், சீராய்வு மனு செய்யாத கேரள மாநிலஅரசையும், தேவசம் போர்டையும் கண்டித்து, மேல்புறம் ஒன்றிய பகுதி மக்கள், ஐயப்ப பக்தர்கள், பெண்கள் சார்பில் அருமனை சந்திப்பில் சனிக்கிழமை (அக்.13) மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரையாற்றுகிறார் என்றார் அவர்.
பேட்டியின்போது மாவட்டத்துணைத்தலைவர் முத்துராமன், மேலிட பார்வையாளர் தேவ், மாவட்டப் பொருளாளர் தர்மலிங்கஉடையார், முன்னாள் நகரத் தலைவர் ராஜன்உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.