கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சியில் தாமிரவருணி மஹா புஷ்கரம் விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திக்குறிச்சி மகாதேவர் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி தீர்த்தப்படித்துறையில் திருக்கயிலை புகுநெறி சிவனடியார் திருக்கூட்டம், அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் இவ் விழா நடைபெறுகிறது.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்த ஹிந்து தர்ம வித்யாபீட சுவாமி ஸ்ரீமத் சைதன்யானந்தஜி மகராஜ், ஸ்ரீமத் பரமேஷ்வர பிரம்மானந்த தீர்த்த 48 ஆவது மடாதிபதி மூப்பில் சுவாமியார், முன்சிறை மடம் புஷ்பாஞ்சலி சுவாமியார் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். வெள்ளிமலை ஸ்ரீமத் சுவாமி கருணானந்தஜி மகராஜ், குமாரகோயில் சின்மயா மிஷன் ஸ்ரீ கணேசன் ஆச்சாரியார், பாஜக தேசிய மகளிரணி பொதுச் செயலர் விக்டோரியா கெளரி, தமிழக பாஜக துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரவருணி நதியில் புனித நீராடி வழிபட்டனர்.
மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். இவ் விழாவையொட்டி காலையில் கணபதி ஹோமம், அதைத் தொடர்ந்து தீர்த்தப்படித்துறையில் ஸ்நானம், ஸ்ரீ ருத்ர ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றன. மாலையில் பன்னிரு திருமுறை பாராயணம், வேத பாராயணம் அதைத் தொடர்ந்து தாமிரவருணி அன்னைக்கு ஆரத்தி, ருத்ரஜபம் உள்ளிட்டவை நடைபெற்றன.