மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட கனரக லாரிகள் உள்ளிட்ட 16 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை, மார்த்தாண்டம், நித்திரவிளை, கொல்லங்கோடு, குளச்சல், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் கேரள பதிவெண் கொண்ட மேக்ஸி கேப் மற்றும் ஆம்னி பேருந்துகள் சாலை வரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு பெறாமலும் இயக்கப்படுவதாகவும், கனரக லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் இப்பகுதி சாலைகள் பழுதடைந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கும், வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
இதனடிப்படையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் மா. கனகவல்லி ஆகியோர் மார்த்தாண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இச் சோதனையின் போது, முறையாக தமிழகத்துக்கு சாலை வரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு பெறாமலும் இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வரி செலுத்தாத இரண்டு ஜேசிபி இயந்திரங்கள், அனுமதிச்சீட்டுக்கு புறம்பாக அதிக பாரம் ஏற்றிச் சென்ற 4 லாரிகள் மற்றும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட பிற மாநில பதிவெண் கொண்ட 4 லாரிகள், தடம்மாறி இயக்கப்பட்ட 2 சிற்றுந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட 2 ஜேசிபி இயந்திரங்களுக்கு ரூ. 25 ஆயிரம், 4 கனரக லாரிகளுக்கு தலா ரூ. 15 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம், பிற மாநிலத்தைச் சேர்ந்த 4 லாரிகளுக்கும் ரூ. 35 ஆயிரம் என மொத்தம் ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், தடம்மாறி இயக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட சிற்றுந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.