திக்குறிச்சியில் நடைபெறும் தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவில் இரண்டாம் நாளான சனிக்கிழமை கேரளத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அதிகாலை முதலே வந்து தாமிரவருணி நதியில் புனித நீராடினர்.
திக்குறிச்சி மகாதேவர் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி தீர்த்தப் படித்துறையில் நடைபெறும் மஹா புஷ்கர விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலையில் நவகிரக ஹோமம், ருத்திர ஹோமம் நடைபெற்றது. மாலையில் பன்னிரு திருமுறை பாராயணம், வேத பாராயணம், தாமிரவருணி நதிக்கு ஆரத்தி ஆகியன நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் ருத்ர ஜபம் நடைபெற்றது.
இதில், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் திரளானோர் புனித நீராடி, திக்குறிச்சி மகாதேவரை வழிபட்டுச் சென்றனர். வேத விற்பன்னர்கள் தாமிரவருணி நதிக்கு ஆரத்தி காட்டி வழிபட்டனர். மேலும் திரளான பெண்கள் தாமிரவருணி நதியில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.