நடிகர் கமல்ஹாசனின் நாடகம் தேர்தலுக்கு ஒத்துவராது என்றார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: தமிழகத்தில் தினமும் ஆவின் மூலம் 3 லட்சத்து 43 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரையில் இந்த அளவு பால் கொள்முதல் நடைபெற்றதில்லை. பால் உற்பத்தியில் இது ஒரு புரட்சி என்று கூறலாம். அதேபோல் ஆவின் பொருள்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இடைத்தேர்தலை கண்டு அதிமுக அஞ்சவில்லை. திருப்பரங்குன்றம் இயற்கையாகவே அதிமுகவின் எஃகு கோட்டை. திருவாரூர் தொகுதியிலும் அதிமுகதான் வெற்றி பெறும்.
தமிழகத்தின் 50 ஆண்டு கால வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் திராவிடக் கட்சிகள்தான் பெரும்பங்காற்றியுள்ளன. திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தை ஆள முடியுமே தவிர, அதை தவிர்த்து இன்னொரு கட்சிக்கு வாய்ப்பே இல்லை.
நடிகர் கமல்ஹாசன் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல் நாடகம் நடத்துகிறார். அவரது நாடகம் தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் படத்தை திரையிட முடியாத ஒரு சூழல் வந்தபோது, அந்த சிறிய பிரச்னைக்காக நாட்டைவிட்டே போகிறேன் என்று கூறியவர். அவர் எப்படி நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்?
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த அதிமுகவையும், சிறந்த ஆட்சியையும் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.
சபரிமலை பிரச்னையை பொருத்தவரை வழிபாட்டு முறையில் யாரும் தலையிடக் கூடாது. அவ்வாறு தலையிட்டால் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். அதுதான் தற்போது கேரள மாநிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.