நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் சார்பில் திங்கள்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையம் எதிரே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் மறியல் நடைபெற்றது. இதனால், பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் தாமதமாக புறப்பட்டன.
குமரி மாவட்ட பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கிய நிலையில், மாணவர்கள் தேர்வு முடிந்து வீட்டுக்குச் செல்வது தாமதமாகியது. ஏராளமான மாணவ, மாணவிகள் நாகர்கோவில் அண்ணா, வடசேரி பேருந்து நிலையங்களில் பேருந்துகளுக்காக காத்திருந்தனர்.
இதுகுறித்து அறிந்த தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், அண்ணா பேருந்து நிலையத்துக்கு வந்தார். அங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அவர், மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாணவ, மாணவிகளுக்காக பேருந்துகளை உடனே இயக்குவதற்கு ஏற்பாடு செய்தார். பின்னர், அவர் வடசேரி பேருந்து நிலையத்துக்குச் சென்று, பேருந்து போக்குவரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, குமரிமாவட்ட அதிமுக செயலர்கள் எஸ்.ஏ. அசோகன் (குமரி கிழக்கு), ஜான்தங்கம் (குமரி மேற்கு), மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் இலக்கிய அணிச் செயலர் சந்துரு, கார்மல்நகர் தனீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.