நாகர்கோவிலில் முழு அடைப்பு போராட்டத்தின்போது, எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினரை அவதூறாக பேசியதாக, காவல் உதவி ஆய்வாளர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினரை காவல் உதவி ஆய்வாளர் முத்துமாரி அவதூறாக பேசினாராம்.
இதுகுறித்து விவாதிக்க, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ், திமுக நகரச் செயலர் மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்டச் செயலர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் செல்லசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. தொண்டர்களை ஒருமையில் பேசியதாக காவல் உதவி ஆய்வாளருக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இக்கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 17ஆம் தேதி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்களும், கூட்டணிக் கட்சியினரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் மனு அளித்தனர்.