நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கேத்லேப் (அதிநவீன இதய சிகிச்சைப் பிரிவு) வசதி கொண்டு வரப்படும் என்றார் மருத்துவக்கல்லூரி முதன்மையர் (டீன்) பாலசுப்பிரமணியன்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீனாக இருந்த டாக்டர் சோமசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூடுதலாக டீன் பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். அவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் லியோ டேவிட், துணைக் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.கண்ணன், உறைவிட மருத்துவ அலுவலர் ஆறுமுகவேல், உதவி உறைவிட மருத்துவ அலுவலர்கள் கலைக்குமார், ரெனிமோள், கண்ணன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் டீன் பாலசுப்பிரமணியன் கூறியது: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத்லேப் வசதி கொண்டு வரப்படும். மேலும், டிஏஇஐ எனப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும். மருத்துவமனையின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்றார் அவர்.