குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அணைகளுக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பலத் மழை பெய்தது. குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 நாள்களில் பெய்த மழையின் அளவு 535.8 மி.மீ. ஆகும். (கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 நாள்கள் பெய்த மழை மழையின் அளவு 104.60 மி.மீ.) இதே போன்று பெருஞ்சாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாள்கள் பெய்த மழையின் அளவு 403.40 மி.மீ ஆகும். (கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 நாள்கள் பெய்த மழையின் அளவு 85.80 மி.மீ.) கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 4 முதல் 5 மடங்கு வரை நிகழாண்டு கூடுதலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில் இத்தனை கன மழை பெய்தபோதிலும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக மழை பெய்த சுவடு தெரியாத வகையில் நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.
அணைகளுக்கு உள்வரத்து கணிசமாகக் குறைந்தது: வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணைகளுக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. பிரதான அணையான பேச்சிப்பாறை அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 526 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கோதையாறு நீர் மின் நிலையத்திலிருந்து வரும் தண்ணீராகும். இந்த அணையிலிருந்து பாசனக் கால்வாயில் விநாடிக்கு 794 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. உபரி மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 32.10 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 276 கன அடி தண்ணீர் பாசனக் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 67.85 அடியாக இருந்தது. சிற்றாறு 1 அணைக்கு விநாடிக்கு 154 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 14.76 அடியாக இருந்தது. சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 14.86 அடியாக இருந்தது.