ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நல்வழிகாட்ட வேண்டும்: நீதிபதி பேச்சு

ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு நல்வழி காட்டும் நெஞ்சுரம் படைத்தவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என, திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிபதி பிளஸ்ட் தாகூர் கூறினார்.


ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு மாணவர்களுக்கு நல்வழி காட்டும் நெஞ்சுரம் படைத்தவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என, திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிபதி பிளஸ்ட் தாகூர் கூறினார்.
தடிக்காரன்கோணம் ரூபன் கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 11ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் நீதிபதி பிளஸ்ட் தாகூர். அவர் பேசியதாவது:
காமராஜர், கக்கன், ஜீவானந்தம் ஆகியோர் பிறந்து வளர்ந்த புண்ணிய பூமியான தமிழகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவர்கள் மூன்று பேரும் நேர்மையாகவும், எளிமையாகவும், உண்மையாகவும் செயல்பட்டனர். மாணவர்களுக்கு வழிகாட்டுகின்ற ஆசிரியர்கள் அவர்களைப் போல செயல்பட வேண்டும். ஆசிரிய மாணவர்கள் எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும். ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு, மாணவர்களுக்கு நல்வழி காட்டும் நெஞ்சுரம் படைத்தவர்களாக ஆசிரியர்கள் திகழவேண்டும் என்றார் அவர்.
பட்டமளிப்பு விழாவிற்கு ரூபன் கல்விக் குழுமத் தலைவர் எம். ரூபன் தலைமை வகித்தார். செயலர் சந்திரகலா ரூபன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்.சுனீத் பென் வரவேற்று அறிக்கை சமர்ப்பித்தார்.
விழாவில் ரூபன் எஜூகேஷனல் டிரஸ்ட் உறுப்பினர்கள் ஆர். ஜார்சன், ஆர் ஜார்சன்யா, கலைக் கல்லூரி முதல்வர் லாரன்ஸ், கம்யூனிட்டி கல்லூரி முதல்வர் ஜெசிந்தா செலினா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com