சங்கரன்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் நகரில் வைக்கப்பட்டிருந்த 36 விநாயகர்சிலைகளும் சுவாமி சன்னதிக்கு கொண்டு வரப்பட்சு, பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊர்வலத்தை புதிய தமிழகம் மாவட்டச் செயலர் இன்பராஜ் தொடங்கிவைத்தார். பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம், இந்து முன்னணி மாவட்டச் செயலர் ஆறுமுகச்சாமி, பார்வர்டு பிளாக் தங்கப்பாண்டி, சங்கரன்கோவில் தொகுதி பாஜக பொறுப்பாளர் பாண்டித்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புளியங்குடி: புளியங்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட 11 விநாயகர் சிலைகளும், சிந்தாமணியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கருப்பாநதி அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
சிவகிரி: அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சர்க்கரை விநாயகர் கோயிலில் ஏழரை அடி உயர விநாயகர் சிலை 11ஆவது ஆண்டாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை விசர்ஜனம் செய்வதற்காக சர்க்கரை விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வந்தார். பின்னர் ராஜசிங்கப்பேரி கண்மாயில் சர்க்கரை விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, தேவேந்திர குல வேளாளர் சமுதாய நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.