எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்தார். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரநிதி என். தளவாய் சுந்தரம் ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்த ஓட்டம் அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், செட்டிகுளம் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வழியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ள ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி மைதானத்தை சென்றடைந்தது.
தொடர்ந்து, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் திரையிடுவதற்காக வரப்பெற்ற அதிநவீன மின்னணு களவிளம்பர விடியோ வாகனத்தை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி கொடியசைத்து தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
பின்னர் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரிக்கு சென்ற என்.தளவாய் சுந்தரம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, வக்பு வாரிய உறுப்பினர் அ.தமிழ்மகன் உசேன், இருளப்பபுரம் பெரியசாமி பாண்டியன், பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.அசோகன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு இணைய முன்னாள் தலைவர் டி.ஜான் தங்கம், எருசலேம் புதிய பயணக் குழு உறுப்பினர் மற்றும் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜஸ்டின் செல்வராஜ், பொழிக்கரை மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்எல்ஏ அ.ராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் கு.தாணப்பா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தீர்த்தோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
22ஆம் தேதி பரிசளிப்பு: இந்த மாரத்தான் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, வருகிற 22ஆம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ்களை தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்.