குமரி மாவட்டம், குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 3 நாள்கள் கூடைப்பந்துப் போட்டி வியாழக்கிழமை (செப். 20) தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு துறையும், என்.ஐ . பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இப்போட்டியில், மகளிர் பிரிவில் என்.ஐ. பல்கலைக்கழகம், கலசலிங்கம், அண்ணாமலை, காருண்யா, எஸ்.ஆர்.எம்., மனோன்மணீயம் சுந்தரனார், அண்ணா பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான், அவினாசலிங்கம் உள்ளிட்ட 10 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கின்றன.
ஆண்கள் பிரிவில் சத்தியபாமா, பாரதியார், காந்திகிராம் உள்பட 12 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளுக்கும் முதல் பரிசு ரூ. 1.20 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.90 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 60 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 5.40 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும்.
என்.ஐ. பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் தொடங்கும் இப்போட்டி தொடக்க நிகழ்ச்சியில், பல்கலை. வேந்தர் ஏ.பி. மஜீத்கான் குத்துவிளக்கேற்றுகிறார்.
மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கே.ஏ. ஜனார்த்தனன் வரவேற்கிறார். பொன்ஜெஸ்லி கல்வி குழுமத்தின் தலைவர் பொன்.ராபர்ட்சிங் போட்டியைத் தொடங்கிவைக்கிறார்.
இதில், பல்கலை. பதிவாளர் திருமால்வளவன், குமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், , உடற்கல்வி இயக்குநர் தர்மராஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
நிறைவு நாளான சனிக்கிழமை (செப். 22) நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு கூடைப்பந்து கழக மாநிலத் தலைவர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். வெற்றிபெறும் அணிகளுக்கு வேந்தர் பரிசு வழங்குகிறார்.