திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்திலிருந்து கேரளத்துக்கு காய்கனி மூட்டைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கேரள போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (42). இவர் தினந்தோறும் சுமை ஆட்டோவில் கேரளத்துக்கு காய்கனி கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை அவர் கொண்டு சென்ற காய்கனி மூட்டைகளை, கேரள மாநிலம், ஆரியங்காவு பகுதியில் கேரள மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சோதனையிட்டனர்.
இதில் காய்கனி மூட்டைகளுக்கு உள்ளே மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் ஏராளமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாடசாமியை கைது செய்த கேரள போலீஸார், புகையிலைப் பொருள்களையும், சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.