"ரூபாய் நோட்டுகள் வாபஸ்: பொருளாதாரத்தை உயர்த்தும்'
மத்திய அரசு எடுத்துள்ள ரூபாய் நோட்டுகள் வாபஸ் முடிவால் இந்திய பொருளாதாரம் உயர வாய்ப்பு ஏற்படும்; அதனால் அதற்கு வரவேற்பு தெரிவிப்பதாக தமிழ்ச் சமுதாய பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகும். உலக பொருளாதார ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்தியது, இந்தியாவில் அன்னிய நாட்டு முதலீட்டாளர்களை அதிகளவில் அனுமதித்தது போன்ற தவறுகளை காங்கிரஸ் அரசு செய்ததால் இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தது. ஆனால், பாஜக அரசின் நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவும், பொருளாதாரம் உயரவும் வாய்ப்பு ஏற்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை சீரமைத்து தமிழகம் முழுவதும் அவர்களுக்கு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது மாவட்ட நிர்வாகிகள் டேவிட், ஆனந்தன், முருகன், ஐயப்பன், அருள், ஆறுமுகவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.