அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
உலக புவி தினத்தையொட்டி திருநெல்வேலி அறிவியல் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் 458 மாணவர்கள் பங்கேற்றனர்.
உலக புவி தினம் குறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிவியல் மையம் சார்பில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 4 பிரிவுகளாக இந்த ஓவியப் போட்டி நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 458 மாணவர், மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓவியங்கள் வரைந்தனர்.
'புவியை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விநாடி-வினா போட்டி நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பொதுமக்களுக்கு மாவட்ட அறிவியல் மைய அலுவலர் கே. நவராம்குமார் பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கிப் பாராட்டினார்.
அறிவியல் மைய கல்வி ஒருங்கிணைப்பாளர் மாரிலெனின், கல்வி உதவியாளர் பொன்னரசன், பெற்றோர்கள் பங்கேற்றனர்.