பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், பாளையங்கோட்டையில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சேவியர் ஜார்ஜ் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் குளத்தூரான் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் நாகராஜன், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். மாநிலத் தலைவர் ஐ. பெரியசாமி சிறப்புரையாற்றினார்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் அரசு அலுவலர் அந்தஸ்து வழங்கவேண்டும். சத்துணவு அமைப்பாளர்கள் ஓய்வு பெறும் நிலையில் இறுதி ஊதியத்தில் பாதித் தொகையை மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கவேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை அனுமதிக்கவேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ. 3 லட்சமாகவும், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் சத்துணவு மைய பணியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவேண்டும்.
நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் பொருள்களை எடை குறைவின்றி வழங்கவேண்டும். சத்துணவுப் பணியாளர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி ஆண், பெண் இருபாலருக்கும் சம பதவி உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மைய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.