கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் நான்காவது நாளாக போராட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 4 ஆவது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை வெளியிட வேண்டும். எட்டு மணி நேரம் வேலை வழங்குவதோடு இலாகா ஊழியராக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16 ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கம் ஈடுபட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நான்காவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கோட்டத் தலைவர் ஐ.ஞானபாலசிங் தலைமை வகித்தார். பொருளாளர் எம்.நம்பி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முருகன், மகேஷ், மரிய ஞானராஜ், செல்வராஜ், பெரியதுரை, செல்வம், லட்சுமணன், திருமால், ஆனந்தராஜ், நடராஜன், ராம்குமார், பெரியதுரை, கற்பகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.