ஆழ்வார்குறிச்சி அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள செட்டிக்குளம் கோயிலில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக 16 வயதுச் சிறுவன் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
செட்டிக்குளத்தில் ஒரு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட சுடலைமாடன் சாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அனைத்துச் சிலைகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தகவலின்பேரில் அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார், கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். இந்து முன்னணி மாவட்டச் செயலர் பால்மாரியப்பன், துணைத் தலைவர் பால்ராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோர் வந்து, சம்பந்தப்பட்டோரை உடனே கைது செய்ய வலியுறுத்தினர். ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் ஊர் நாட்டாண்மை மாதவன் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, இச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அந்தச் சிறுவனை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.