தமிழ்நாடு அரசு ஹாஜிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரியில் கடலூர் மாவட்ட அரசு ஹாஜி நூருல்அமீன் தலைமையில் நடைபெற்றது.
குமரி மாவட்ட அரசு ஹாஜி மெளலானாஅபுஸாவின், ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி ஸலாஹூதீன் ,தூத்துக்குடி மாவட்ட அரசு ஹாஜி அம்ஜத்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்ட ஹாஜி ஷாநவாஸ் கிராஅத் ஓதினார். திருநெல்வேலி மேற்கு மாவட்ட அரசு ஹாஜி முகைதீன் ஹஜ்ரத் வரவேற்றார். கிழக்கு மாவட்ட அரசு ஹாஜி முகமதுகசாலி தொகுத்து வழங்கினார். வடக்கு மாவட்ட ஹாஜி முஜிபுர்ரஹ்மான் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார்.
கூட்டத்தில், கெளரவத் தலைவராக முகமதுஸலாவுதீன் அயுப், தலைவராக ஸலாஹூதீன், செயலராக முஜிபுர்ரஹ்மான், பொருளாளராக முகமது கசாலி ஆகியோர் தேர்வாகினர். மேலும், "தமிழக அரசின் தலைமை ஹாஜியை வக்பு வாரிய உறுப்பினராக நியமிக்க வேண்டும்; அரசு ஹாஜிகள் இல்லாத மாவட்டங்களில் உடனடியாக ஹாஜிகளை நியமிக்க வேண்டும்; அரசு ஹாஜிகளுக்கு மாநில அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளை கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகமதுஅபூபக்கர் நேரில் வாழ்த்தினார்.