திருநெல்வேலி மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூல் இலக்காக ரூ. 54 லட்சத்து 14 ஆயிரத்து 800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் படைவீரர் கொடி நாள் விழா திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் 35 முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சத்து 57 ஆயிரத்து 435 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியது:
முப்படைகளையும் சேர்ந்த வீரர்களின் சேவையை நினைவுக்கூரும் வகையில் டிசம்பர் 7 ஆம் தேதி படைவீரர் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. முன்னாள் படைவீரர் நலத்திற்காகவும், அவர்களது குடும்பத்தினர் நலத்திற்காகவும் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படுகிறது. இம் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டில் படைவீரர் கொடிநாள் நிதிக்கு அரசு ரூ. 49 லட்சத்து 22 ஆயிரத்து 500 இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் மிஞ்சும் வகையில் ரூ.94 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 5 லட்சத்து 28 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்களுக்குத் தனியாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. அலுவலர்கள், பணியாற்றி வரும் படைவீரர் மற்றும் முன்னாள் படைவீரர்களின் கோரிக்கைகளைத் தனிக்கவனத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், திருநெல்வேலி முப்படை வாரிய துணைத் தலைவர் கர்னல் செல்லபாண்டியன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ராஜேந்திரன், கண்காணிப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூல் இலக்காக ரூ. 54 லட்சத்து 14 ஆயிரத்து 800-ம், திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ. 5 லட்சத்து 66 ஆயிரத்து 300-ம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.