கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் வியாழக்கிழமை நடத்திய போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
ஒக்கி புயலின்போது மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. குளித்துறை ரயில் நிலையத்தில் மீனவர்கள் வியாழக்கிழமை 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனால் திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி ரயில் பாதியில் திருவனந்தபுரம் சென்றடையாமல், நாகர்கோவிலுடன் நிறுத்தப்பட்டது. இதேபோல திருவனந்தபுரம்-சென்னை இடையேயான அனந்தபுரி விரைவு ரயில் கேரள மார்க்கமாக இயக்கப்பட்டது. கன்னியாகுமரி விரைவு ரயில் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக திருநெல்வேலியை வந்தடைந்தது. ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உடமைகளுடன் காத்திருந்த ரயில் பயணிகளும், அவர்களது உறவினர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.