பருவமழை பாதித்த நெல் வயல்களில் உர மேலாண்மை செய்வது எப்படி?

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் உர மேலாண்மையை விவசாயிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் உர மேலாண்மையை விவசாயிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி வேளாண்மை இணை இயக்குநர் இல. பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போது பெய்த மழையினால் செங்கோட்டை, வள்ளியூர், களக்காடு வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்களில் ஒரு சில இடங்களில் நீர்த் தேங்கி நிற்கிறது. நெல் வயல்களில் நீர்த் தேங்கி நிற்பதால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதுடன் பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உருவாகும்.
ஆகவே, விவசாயிகள் தங்கள் நெல் வயல்களில் தேங்கியுள்ள நீரினை உடனடியாக வடித்திட வேண்டும். மழையினால் ஏற்பட்ட ஊட்டச்சத்து இழப்பினை சரிசெய்யும் வகையில் 26 கிலோ யூரியாவுடன், 21 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து மேலுரமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு இட வேண்டும். மேலும், ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ சிங்க் சல்பேட்டை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும். மழையினால் நெல் பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று பயிர்ப் பாதுகாப்பு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com