திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியில் ரூ. 43 லட்சம் மதிப்புள்ள செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
புளியங்குடி சிந்தாமணியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முருகன் (33). இவர் கேரள மாநிலம் திருச்சூரில் சமையலராக பணி செய்து வருகிறார். திருச்சூரை சேர்ந்த மோகனன் மகன் சஜீவன் (41). இருவரும் நண்பர்கள். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என சஜீவன், முருகனிடம் தெரிவித்தாராம்.
இதையடுத்து, புளியங்குடியில் தெரிந்த நண்பர் மூலம், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகள் வாங்கலாம் என முருகன் தெரிவித்ததை அடுத்து, இருவரும் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சிவராமபிள்ளை மகன் சிவகுமார் (54), பழைய ரூபாய் நோட்டுகளுடன் செவ்வாய்க்கிழமை புளியங்குடி வந்தனர். பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த முருகன் உள்ளிட்ட மூவரிடமும், சந்தேகத்தின்பேரில் காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடமிருந்த பையை சோதனையிட்டதில், ரூ. 23 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டுகளும், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்து சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.