அபாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் ஒரே நாளில் 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள அடைக்கலப்பட்டணம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ்பீட்டர் (59). ஓய்வுபெற்ற அரசு அலுவலர். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள புனித பவுலின் ஆலயத்திற்கு சென்றாராம்.
பின்னர், 11 மணியளில் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 45 கிராம் தங்க நகையும், ரூ.30 ஆயிரம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம்.
மேலும், அதே தெருவில் வசிக்கும் சுவிசேஷபுரம் கிறிஸ்தல ஆலயத்தில் பங்குதந்தையான காலேப்சாமுவேல் (47), ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆலயத்திற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 கிராம் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள சுவிசேஷபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சாமுவேல் மகன் மனுவேல்ராஜ்(47). ஆய்க்குடி அரசுப் பள்ளி ஆசிரியர். இவரும், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டருகில் உள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு, திரும்பி வந்தபோது, வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், பீரோவில் இருந்த 255 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தனவாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் டி.எஸ்.பி.சங்கு மற்றும் பாவூர்சத்திரம் போலீஸார் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சோதனைக்கு விடப்பட்டதுடன், விரல் ரேகை நிபுணர்களும் சோதனை நடத்தினர்.
3 சம்பவங்கள் குறித்தும் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.