தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் புகழைப் பரப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காமராஜர் ரத ஊர்வலம் திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்தது.
தமிழ்நாடு காமராஜர் சிவாஜி பொதுநல இயக்கம் சார்பில் காமராஜரின் புகழை இளையதலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் காமராஜர் ரத ஊர்வலம் கடந்த 15 ஆம் தேதி விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் இருந்து புறப்பட்டது. சிவகாசி, சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலியை ஊர்வலம் திங்கள்கிழமை அடைந்தது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலத்துடன் வந்த குட்டம் சிவாஜி முத்துக்குமார், ஜி.முருகன், இனாமுல் ஹசன், மருதூர் பெரியசாமி, முருகன் விசிறிசாமிகள், நாகார்ஜுன் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். திருநெல்வேலி மாவட்டத்துக்குள்பட்ட இடையன்குடி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த ஊர்வலம் பணகுடி, கூடங்குளம், உவரி, சொக்கலிங்கபுரம் வழியாக வெள்ளிக்கிழமை (ஜூலை 21) கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தை அடைகிறது.