டக்கரம்மாள்புரம் அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாளையங்கோட்டையை அடுத்த டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மரியதாஸ் (70). ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவர், தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டினுள் இருந்த 9 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இத்தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீஸார், அங்கு சென்று விசாரித்தனர். விரல் ரேகை நிபுணர்களும் சோதனை நடத்தி, பதிவுகளை சேகரித்தனர்.
கடையில் திருட்டு: பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகேயுள்ள மிலிட்டரிலைன் பகுதியைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (44). இவர், அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு சென்றாராம். திங்கள்கிழமை காலையில் வந்து பார்த்தபோது கடையின் கூரையில் துளையிட்டு அங்கிருந்த பொருள்கள், பணம் உள்பட சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலானவற்றை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.